கோலாகலமாக நடைபெற்ற ‘தி பன்ச் நியூஸ் ‘ நிறுவனத்தின்.. அச்சு மற்றும் மின்னணு உறவுகள் சந்திப்பு

கோலாகலமாக நடைபெற்ற
‘தி பன்ச் நியூஸ் ‘ நிறுவனத்தின்..
அச்சு மற்றும் மின்னணு உறவுகள் சந்திப்பு..!

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ‘ தி பன்ச் நியூஸ் ‘ நிறுவனத்தின் அச்சு மற்றும் மின்னணு பிரிவில் பணியாற்றும் உறவுகளின் சந்திப்பு திருவண்ணாமலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

‘உலகம் உள்ளங்கையில்’ என்ற வாசகத்துடன் ஊடக உலகில் அரசியல் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் மாதந்தோறும் வழங்கி வரும் இதழ் ‘ தி பன்ச் நியூஸ்’ . பத்திரிக்கை துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இனியவன் ஆசிரியராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் இந்த மாத இதழின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ‘உறவுகள் சந்திப்பு’ எனும் நிகழ்வு நடைபெறுவதுண்டு. இந்நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொள்வதுண்டு.  

இந்த ஆண்டும் திருவண்ணாமலையில் உள்ள அர்ப்பனா எனும் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிறுவன உறவுகள் சந்திப்பு நிகழ்விற்கு விருந்தோம்பல் துறையில் சர்வதேச தரத்துடனும்,தனித்துவமான அடையாளத்துடனும் இயங்கி வரும் ஹோட்டல் அர்ப்பனாவின் நிர்வாக இயக்குநர் திரு. முத்துகிருஷ்ணன், இதழியல் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலரும், சமூக போராளியுமான எழுத்தாளர்  ந. பா. சேதுராமன், மூத்த இதழியலாளர் ஆர்.  அருண் மற்றும் மூத்த இதழியலாளர் கே வி ஆர் கோபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவன உறவுகள் சந்திப்பு நிகழ்வில் தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், ” ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய ஆசிரியர், நீ என்னவாக போகிறாய்? என்று என்னைப் பார்த்து கேட்டார். விருந்தோம்பல் துறையில் சாதிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டேன். மூன்று விசயங்களை வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடித்தால் நிச்சயம் நீ சாதிப்பாய் என்றார்.  ஆரோக்கியம்- உழைப்பு-  குணம் – என அவர் குறிப்பிட்ட அந்த மூன்று விசயங்களை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். என் வாழ்க்கையில் வெற்றியின் ரகசியத்தை கூறியவர் ஒரு பத்திரிக்கையாளர். பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டு வருகிறார்கள் அதனால் தான்  ‘தி பன்ச் நியூஸ்’ இனியவன் இந்த நிகழ்விற்கான அனுமதியை கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தேன். பத்திரிக்கையாளர்களுடன் நல் உறவினை விரும்புகிறேன். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்நிகழ்விற்கு கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தி சேகரித்தல் – செய்திக்குரிய புகைப்படத்தை தேர்வு செய்தல் – கிடைத்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறை- அதற்குரிய அணுகுமுறை – எம்மாதிரியான செய்திகள் வாசகர்களை கவர்ந்து, தாக்கத்தை ஏற்படுத்தும் – செய்தி சேகரிக்கும் போது செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் – காவல்துறை +அரசு இயந்திரம் +பொதுமக்கள் + என செய்தி சேகரிக்கும் போது உருவாகும் இடையூறுகளை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்த பல சந்தேகங்களுக்கு… மூத்த இதழியலாளரும் எழுத்தாளருமான ந. பா. சேதுராமன் விரிவாகவும், சட்டப்பூர்வமான அணுகுமுறை குறித்தும் விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இதழின் ஆசிரியர் இனியவன் பேசுகையில், ” இதுபோன்ற நிகழ்வுகள் செய்தியாளர்களுக்கு மிகுந்த பலனை அளிக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் இதுபோன்ற தருணங்களில் நம் நிறுவனத்தை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.
மாத இதழாக தொடங்கிய ‘தி பன்ச் நியூஸ்’ சட்டபூர்வமாக அரசின் அங்கீகாரத்தை பெற்றதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இனி தமிழகம் முழுவதும் அரசியல் சார்ந்த சமூகம் சார்ந்த அனைத்து செய்திகளும் உடனடியாக பிரத்யேக புகைப்படங்களுடன் நம் டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் ‘தி பன்ச் நியூஸ் ‘ தமிழில் நம்பகமான செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி தளமாக இயங்கும் என நம்புகிறேன். இதற்கு அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்த செய்தியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

-கே.வி.ஆர்.கோபி