தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் நண்பரின் வீட்டுக்குச் சென்ற பாஜக பிரமுகர் நண்பரின் 15 வயது மகளை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர் நீலகண்டனை வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி ஆலங்குளம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் பிரபல தனியார் (KPN) ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது நீலகண்டன், சிறுமி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் . மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீலகண்டன் பாஜக பிரமுகர் மட்டுமன்றி அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வழக்கு பதிவு செய்யவில்லை. என்று தெரிகிறது. எனவே இது குறித்து சிறுமியின் பெற்றோர்தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அதன்பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை .
எனவே சிறுமியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். அவரது மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி உடனடியாக நீலகண்டன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீலகண்டன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுபடி போலீசா தன் மீது வழக்கு பதிவு செய்துவிட்டனர் என்பதை அறிந்த நீலகண்டன் போலீசாரின் கைகளில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். ஆனாலும் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர்கள் நீலகண்டனை வலை வீசி தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.முத்துசாமி