காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
இந்த ஆலய வளாகத்திற்குள் அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ திரிபுரசுந்தரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களில் இரண்டு உண்டியல்களிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த உண்டியல்களின் காணிக்கைகளை எண்ணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஏழாம் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோயில் சுற்றிலும் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த இரு கோயில்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள மதில் சுவர் இடிக்கப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஸ்ரீ சண்முக நாதர் ஆலயம் மற்றும் திருபுரசுந்தரி ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து அதில் உள்ள பணம், வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்களை எடுத்து சென்றுள்ளனர்
காலை கோயில் நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கோயில் நிர்வாகி மற்றும் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருபவர்களை அழைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பா.மணிகண்டன்