காஞ்சிபுரம்- ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் லஞ்சம் வாங்கி பிடிபட்டனர் புதிய சாதனைக்கு மாநகராட்சி முயற்சி?

காஞ்சிபுரம் மாநகராட்சியில், கையூட்டு வாங்கும் அதிகாரிகள், போலீசிடம் தொடர்ந்து சிக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு அதிகாரிகள் கையூட்டு  வாங்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில், காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. கோவில் நகரம், பாரம்பரிய நகரம் என்ற பெயர்கள் பெற்றிருந்தாலும், நிர்வாக ரீதியில், சொத்துவரி வசூலிப்பதில் முதன்மை மாநகராட்சியாக உள்ளது. ஆனால், நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகளால், அடிக்கடி காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, நிர்வாக சீர்கேடு இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் சிக்கியபடியே உள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரியவந்து, சமீப காலத்தில் இரு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், வரி விதிப்பு, இறப்பு சான்றிதழ் என, எந்த சேவைக்கும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்காமல், நகரவாசிகளால் சேவையை இலவசமாக பெறவே முடியாத நிலை உள்ளது.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமல்லாமல், அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் பல மடங்கு தொகை, லஞ்சமாக கொடுத்தால்தான், வேலை நடப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய நான்கு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். 2024 ஆகஸ்டில் நகரமைப்பு பிரிவில் பணியாற்றிய நகரமைப்பு ஆய்வாளர் ஷ்யாமளா என்பவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 73 லட்ச ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

– ப.மணிகண்டன்