120 -114 உறுதியானது அதிமுக பாஜக கூட்டணி!. அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள்..?

120 -114
உறுதியானது அதிமுக பாஜக கூட்டணி!.
அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள்..?

2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்ய பாஜக மும்பரமானது. ஆனால் அதிமுக பிடி கொடுக்கவே இல்லை. முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் ஒரு காலமும் பாஜக கூட்டணி அனுமதிக்க மாட்டோம் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையின மக்களின் வாக்கை இழந்தோம். இனி ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டோம் என்று ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்த நிலையில் எப்படி அதிமுகவை வழிக்கு கொண்டு வருவது என்று காத்திருந்த பிஜேபிக்கு, எடப்பாடி சம்பந்தி ராமலிங்கத்தின் ஊழல் திடீரென நினைவுக்கு வந்தது. வைத்தார்கள் அதிமுகவுக்கு பிஜேபி செக்.

இப்போதுதான் தெரிகிறது செங்கோட்டையன் பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது என்று. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அதற்குள் என்ன அவசரம் என்று இருந்திருக்கும் பாஜக. அதற்குள் அதிமுக விஜய் நெருக்கமானது தெரியவர தும்பை விட்டு வாலை பிடிக்க வேண்டாம் என்று உடனே அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து விட்டது

பாஜக. அண்ணாமலை தான் இடையூறு என்று பாஜக முன் தன் குற்றச்சாட்டை வைத்த எடப்பாடிக்கு என்ன பதில் சொன்னது பாஜக என்று தெரியவில்லை. அமித்ஷாவுடன் நடந்த உரையாடலில் கூட்டணி உறுதியானது. அதிமுக மட்டும் தனித்துப் போட்டியிட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது கடினம். எனவேதான் இதற்கு முன்னரே ஓபிஎஸ், தினகரன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் ஜி கே வாசன், ஜான்பாண்டியன் என ஒரு சிறு குழுவை உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக.

பாமகவின் நிலை என்ன? அதிமுகவுடன் பாமக நேரடி கூட்டணியா அல்லது பாஜகவின் உள் ஒதுக்கீடா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையை திமுக பயன்படுத்திக் கொள்ள முன் வருகிறது. எப்படியாவது பாமகவை இழுத்துப் போட வேண்டும் என்பது திமுகவின் அஜந்தா. பாமக அதிமுகவுடன் தனித்து கூட்டணி அமைத்தால் தான் அதிமுகவுக்கு லாபம். இல்லையென்றால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் பாமக வெற்றி பெறும்.

பாஜக உள் ஒதுக்கீட்டில் பாமக கூட்டணி வைத்தால் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாமகவின் பங்களிப்பு குறைவாக தான் இருக்கும். இதுவும் எடப்பாடிக்கு தெரியும்.

இந்த நிலையில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. என்னதான் கூட்டணியில் இருந்தாலும் டிடிவி தினகரன் மீண்டும் குக்கர் சின்னத்திலே போட்டியிடுவார் என்று தெரிகிறது. எந்த பாஜகவை எதிர்த்து தொலைக்காட்சிகளில் செய்தித்தாள்களில் பேட்டி கொடுத்தாரோ அந்த சிவி சண்முகமும் எடப்பாடி உடன் அமித் ஷா சந்திப்பில் கலந்து கொண்டார். ஜெயக்குமார் மட்டும் மிஸ்ஸிங்.

ஏற்கனவே இரண்டு அணிகளாக இருந்த அதிமுக இப்போது அரண்டு போய் உள்ளது. தங்கமணி வேலுமணி அணி எப்போதோ பாஜக கூட்டணி தான் சரி என்பதை முடிவு செய்து இயங்கத் தொடங்கி உள்ளது எல்லோருக்கும் தெரியும். அதிமுகவில் யாருக்கு சீட்டு என்கிற குழப்பம் இப்போது ஆரம்பித்து விட்டது.

அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தால் சிறுபான்மையினர் வாக்கு திமுக பக்கம் போவது உறுதி. அப்படி பாஜக அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் திமுக மீண்டும் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் துணையுடன் ஆட்சியில் பங்கு கொடுத்தாவது மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் அதிமுக ஏற்படுத்தியிருக்கும் இந்த கூட்டணி 90% உறுதி என்பதில் மாற்றமில்லை.

அதிமுகவின் பிளவை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு பாஜக தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இது தொடருமானால் அதிமுக எதிர்காலத்தில் காணாமல் போவதற்கு வாய்ப்புண்டு அண்ணாமலை அதை தான் எதிர்பார்த்து காத்து இருக்கிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் மும்பரமாகி வருகிறார்கள். அவர்களை நம்பி வந்தவர்கள் நட்டாற்றில் விடப்போவது உறுதி. அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதால் கம்யூனிஸ்டுகள் அதிமுகவில் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. எப்படியோ பாஜக எடப்பாடியை சூழ்நிலை கைதியாக மாற்றி விட்டது.

பா.ஜோதி நரசிம்மன்