புதுக்கோட்டை மாநகர செயலாளராக கொடிக்கட்டி பறந்தவர் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் செந்தில், இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். இவர் ஆற்றிய கட்சி பணியும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும், இன்று வரையிலும் அவரை திமுகவினர் உள்ளத்தில் இருந்து நீக்கி மறக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் திமுக மாநகர செயலாளர் பதவிக்கு மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களான ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் என பலரும் தங்கள் ஆதரவாளர்களுக்காக கடும் போட்டி போட்டனர்.
இந்த விஷயத்தில் கராராக இருந்த அமைச்சர் நேரு, தனது ஆதரவாளர் மறைந்த செந்தில் மகன் கணேஷ்-க்குதான் மாநகர செயலாளர் பதவி என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என காத்திருந்த திமுக மாநிலங்களவை எம்பி எம்.எம். அப்துல்லா, ஏற்கனவே வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆர்வம் காட்டி தோல்வி கண்ட நிலையில், தக்க சமயம் பார்த்து அமைச்சர் நேருவை எதிர்க்கும் வகையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவியோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, கட்சியில் எந்த பங்களிப்பும் அளிக்காத, கட்சியினருக்கே யார் என்று அடையாளம் தெரியாத, தனது ஆதரவாளரான ராஜேஷ் என்பவரை மாநகரச் செயலாளர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
மேலும் ராஜேஷ் மூலம் புதுக்கோட்டை மாவட்ட அரசியலை தொடங்கவும் அவர் திட்டம் வகுத்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென திமுக தலைமை புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக ராஜேஷ்-ஐ கடந்த மார்ச் 12ஆம் தேதி அறிவித்தது.
இதனால் கொந்தளிப்புக்கு உள்ளான புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள், ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் முதலமைச்சராக நேரடியாக சந்தித்து ராஜேஷ் என்பவர் யார், எம்பி எம் எம் அப்துல்லா என்ன திட்டத்தில் உள்ளார் என எல்லாவற்றையும் விளக்கி கூறியுள்ளனர்.
இது தொடர்பாக நல்ல முடிவு எடுப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் உடனடியாக கட்சியின் தலைமை எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜேஷ், மாவட்ட திமுக அலுவலகத்திற்கு தன்னந்தனியாக காரில் சென்று வருவதும் போவதுமாக இருந்து வந்தார்.
திமுக நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமலும், திமுக மூத்த நிர்வாகிகளும் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்தது. இருந்தாலும் ராஜேஷ் தனக்கென நான்கு பேரை கூட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, தனியாக நலத்திட்டங்கள் வழங்குவது என செயல்பட்டு வந்தார்.
இதையெல்லாம் கவனித்து வந்த அமைச்சர் நேரு தனக்கான நேரத்தில் சரியாக காய் நகர்த்தி முதலமைச்சரின் கவனத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட அரசியலை கொண்டு சேர்த்துள்ளார்.
ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறிய கருத்துக்கள், அமைச்சர் கே.என். நேருவின் புகார்களை புரிந்து கொண்ட முதலமைச்சர், புதுக்கோட்டை மாநகரத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து இரண்டு மாநகர செயலாளர் நியமிக்க திட்டமிட்டத்துடன், நேருவின் பரிந்துரையின் பெயரில் மறைந்த மாநகரச் செயலாளர் செந்தில் மகன் கணேஷ்-க்கும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் பரிந்துரையின் பெயரில் தற்போதைய மாநகராட்சி துணை மேயர் தியாகத் அலி அல்லது முன்னாள் நகர செயலாளர் நைனா முகமது இவர்களை நியமிக்க முடிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் எனவும் தலைமைக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன.
எது எப்படி நடந்தாலும் நாடாளுமன்ற அரசியலில் சாதிக்க முடியாது, தமிழக அரசியலில் களம் காண திட்டமிட்டிருந்த திமுக எம்பி அப்துல்லாவின் கனவை அமைச்சர் கே என் நேரு மற்றும் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் உடைத்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
– சாமிநாதன் மாரிமுத்து