ரவி மோகன் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு ‘தனியாவர்த்தனம்’
செய்யும் நடிகர் ரவி மோகன் நடித்து வந்த எந்த படங்களும் நிறைவு பெற்று, வெளியாக கூடிய நிலையில் இல்லாததால் கவலை அடைந்து, ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எனும் பெயரில் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே யோகி பாபுவிடம் கதை சொல்லி இயக்குநர் அவதாரம் எடுக்கலாம் என காத்திருந்தபோது சினிமா சூழல் சரியில்லாத காரணத்தினாலும் … யோகி பாபுவின் சந்தை மதிப்பு முன்பு போல் இல்லாததாலும் …ரிஸ்க் எடுத்தாலும் சொந்தமாக ரிஸ்க் எடுப்போம் என கருதி படத்தை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார் ரவி மோகன்.
இதற்காக ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என சந்தானத்தை வைத்து இரண்டு சுமாரான ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரை கூப்பிட்டு படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ரவி மோகன்.
இந்தப் படத்திற்கு ப்ரோகோட் என டைட்டிலையும் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் படங்களுக்கு இங்கிலீஷில் டைட்டில் வைப்பது லேட்டஸ்ட் ட்ரெண்ட். இந்தப் படத்தில் ரவி மோகனுடன் ‘ஓவர் ஆக்டிங் ‘ எஸ் ஜே சூர்யாவும் நடிக்கிறார்.
இது தொடர்பாக படக் குழுவினர் பேசுகையில், ” ஸ்லாப்ஸ்டிக் காமெடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட எண்ணியிருக்கிறோம்” என்றனர்.
இதனிடையே நடிகர் ரவி மோகன் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் ‘பராசக்தி’ எனும் படத்தில் வில்லனாகவும், ‘கராத்தே பாபு ‘ எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.ஆர்.வி.கோபி