தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டரில் யார் ரிலீஸ் செய்வது? என்பதில் மிகப்பெரிய அரசியல் சதி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை திரையுலக வணிகர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்கள் வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே விஜய் நடித்த படங்கள் வெளியாகும் போது அஜித்தின் ரசிகர்கள் படத்தைப் பற்றி மோசமாக இணையத்தில் விமர்சிப்பார்கள். இப்போது அவர் அரசியலில் இறங்கி விட்டதாலும்.. அதிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வருவதாலும் திமுகவினரும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக இணையத்தில் விமர்சனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போதாது என்று விஜய்- அதிமுகவையும் விமர்சித்து வருவதால் அவர்களும் ‘ ஜனநாயகன்’ படத்திற்கு தங்களால் முடிந்த அளவிற்கு ஆப்பு வைக்க தயாராகவை இருக்கிறார்கள்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்த விஜய், படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த கே வி என் நிறுவனத்திடம் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமையை எந்த காரணம் கொண்டும் அரசியல் பின்னணி உள்ள நிறுவனத்திடம் விற்பனை செய்யக்கூடாது என்று கண்டீசன் போட்டிருக்கிறார். இதனால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், கலைப்புலி தாணு , கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் போன்ற அரசியல் தொடர்புள்ள விநியோகஸ்தர்களுக்கு இந்த முறை தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் கிடைக்காது.
அத்துடன் தன்னை வைத்து படம் எடுப்பதற்கு தயாராக இருக்கும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், அரசியல் பின்னணி இல்லாதவருமான லலித் குமாரிடம் படத்தின் தமிழக தியேட்டரிக்கல் ரிலீஸை கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கிறார் விஜய்.
இதுதான் தருணம் என்று காத்திருந்த தயாரிப்பாளர் லலித்குமார் – தமிழக தியேட்டரிக்கல் ரைட்ஸிற்காக தயாரிப்பாளர் சொன்ன நூறு கோடி ரூபாய் தர இயலாது என்றும், அதிகபட்சமாக அறுபது கோடி ரூபாய் தான் தர முடியும் என்றும் பேரம் பேசுகிறாராம்.
இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘ஜனநாயகன்’ படம் எந்த குழப்பமும் இல்லாமல் வெளியாகுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் அரசியல் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் விஜய் தரப்பினர் தகவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.ஆர்.வி.கோபி