ஆண்டிபட்டி நர்ஸ் கொலை முன்னூறு பேருடன் பழக்கம் நூற்று ஐம்பது பேருடன் தொடர்பு.

உயிரிழந்தவர் மீது பழியை போட்டு வழக்கை முடித்த போலீஸ்?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வி. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது பழக்கவழக்கங்கள் சரியில்லாததால் இவரை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இவரது கணவர் சுரேஷ் இரண்டு குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் குடியிருக்கிறார். நர்ஸ் செல்வி பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பாம்பம்மாள்புரத்தில் உள்ள செல்வி வீட்டில் கடந்த மாதம் 24ஆம் தேதி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் செல்வியின் வீட்டில் சென்று ஆதாரங்களை சேகரித்த போது அங்கே நூற்றக்கும் மேற்பட்ட உயர் ரக ஆணுறை பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினரின் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செல்வியின் தொலைபேசியில் இருந்த முன்னூருக்கும் மேற்பட்ட நபர்களின் தொடர்பு எண்களை வைத்து ஆராய்ந்ததில் செல்விக்கு பல்வேறு நபர்களுடன் ரகசிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் செல்வியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தர். விசாரணையில், பல்வேறு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் மற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலருடன் செல்வி தொடர்பில் இருந்தது தெரியவர, இது தொடர்பாக அனைவரிடமும் ஆண்டிபட்டி காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியைச் சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியரான ராமச்சந்திரபிரபு என்பவரை அழைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

ஆனால், அதற்கு அடுத்த நாள் 11ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திர பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் போலீசாருக்கு இராமச்சந்திரபிரபு மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமச்சந்திரபிரபுவும் செல்வியும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து கள்ளத்தொடர்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவரும் பணி மாறுதல் பெற்றுச் சென்று விட்ட போதும் இவர்களுக்குள்ளான தொடர்பு நீடித்து வந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ற கடந்த மாதம் 24ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ராமச்சந்திரபிரபு செல்வியின் வீட்டிற்கு வந்து சென்றதாக சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன.இதனை வைத்து ராமச்சந்திரபிரபு தான் கொலையாளி என்று முடிவு செய்து இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர போலீசார் முடிவு செய்தனர்.

முன்னதாக கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து பணமோ நகையோ திருடப்படவில்லை என்று காவல்துறையின் சார்பாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கொலை நடந்த தேதியில் ராமச்சந்திரபிரபு செல்வியின் 3 பவுன் செயினை எடுத்துச் கொண்டு சென்று பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொலை நடந்த தினத்தில் மாலை 4 மணியளவில் அடகு வைத்ததாக தற்போது கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அரசு ஊழியராக உள்ள ஒருவர் கொலை செய்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் நகையை தனது பெயரில் அடகு வைப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அடகு வைக்கப்பட்ட நகையை செல்வியின் கணவர் சுரேஷ் அடையாளம் காட்டினார் என்று காவல்துறை கூறுவது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வியுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவர் எப்படி நகையை அடையாளம் காட்டி இருக்க முடியும்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

மேலும் தரையில் இருந்த செல்வியின் ரத்தக் கரையில் பதிந்திருந்த காலடித் தடத்தை வைத்துத்தான் அடையாளம் கண்டோம் என்று காவல்துறை கூறுவது ஒருபுறமிருந்தாலும், ஆண்டிபட்டியைச் சேர்ந்த இன்னொருவரின் காலடித்தடமும் 95 சதவீதம் அளவிற்கு பொருந்தி உள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தில் செல்வியின் வீட்டிற்கு பல்வேறு நபர்கள் வந்து சென்றதாக சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் சிக்கல் ஏற்படும் என்பதாலும்,கொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன போதும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையே என்கிற துறை ரீதியான அழுத்தம் ஒரு பக்கம் என செய்வதறியாது தவித்து வந்த காவல்துறையினர், ராமச்சந்திர பிரபுவிடம் நர்ஸ் செல்வி பல லட்ச ரூபாய் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.

ராமச்சந்திரபிரபுவை குற்றவாளியாக்கி இந்த வழக்கை முடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்வியின் வீட்டில் இருந்த பாதத்தடங்கள், கைரேகை மற்றும் செல்வியின் கையில் இருந்த கொலையாளியின் முடி ஆகியவற்றை வைத்து மரபணு சோதனை செய்யப்பட்டபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகவும்,இந்த விவகாரங்கள் வெளியானால் இந்த கொலை வழக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் ஏற்கனவே உயிரிழந்த ராமச்சந்திர பிரபுதான் கொலையாளி என்று முடிவு செய்து இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ காவல்துறையினரே இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வழக்கின் விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்த விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு வழியாக முடிவுக்கு வந்த நர்ஸ் கொலை வழக்கு.உடன் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியரே தீர்த்துக் கட்டியது அம்பலம். தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நிம்மதிப் பெருமூச்சு.
கடந்த 25 தினங்களுக்கும் மேலாக காவல்துறையினரையே தலை சுற்ற வைத்த இந்த வழக்கு விசாரணை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. செல்வியிடம் தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அனைவரும் நர்ஸ் செல்வியுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். காவல்துறையினரின் விசாரணைக்குச் சென்று வந்த 150க்கும் மேற்பட்டோரில் பலரது குடும்ப வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நர்ஸ் செல்வியை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோரும் தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

– கா.ராதாகிருஷ்ணன்.