கட்சியையும், நிர்வாகிகளையும்,தேடும் மேலிடப் பார்வையாளர்…திருவண்ணாமலை காங்கிரஸ் நிலவரம்?

மணல்ல கயிறு திரிக்கிறது, தண்ணியில கோலம் போடறது, வாயால வட சுடறது, இதெல்லாம் இல்லாட்டி அரசியல்ல நிற்க முடியாது தேசிய கட்சியான காங்கிரஸ்ல பத்து வருடங்களுக்கும் மேலாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவராக கோலோச்சிக்கொண்டு இருக்கும் செங்கம் குமார் மேற்படி திறமைகளை அதிகமாக கொண்டு இருந்ததால் பொருளாதார ரீதியாக தன்னை வளர்த்துக்கொண்டார் மாநில தலைவராக கே.சி.அழகிரி இருந்தபோது, செங்கம் குமார் மாநில தலைவராகவே தன்னை ஆக்டிங் பண்ணிக்கொண்டு கே.சி.அழகிரிக்கு கூரியர் சர்வீஸ் வேலை பார்த்தார் அதனால் நிறைய லாபமடைந்தார் ஏராளமான பகையை சம்பாதித்தார். தான் ஒருமுறையும், தன் மனைவி ஜெயராணி ஒருமுறையும் செங்கம் ஒன்றியக்குழு தலைவராக இருந்தனர். யூனியன் அலுவலகத்தை விற்கவில்லையே தவிர மற்ற வேலைகளை சிறப்பாக செய்து முடித்தார். இது குறித்த ஏராளமான தகவல்கள் செங்கம் ஒன்றியத்தில் கொட்டிக்கிடக்கிறது. தேவைப்படுபவர்கள் நேரில் சென்று அள்ளிக்கொள்ளலாம்.
காங்கிரஸ் என்றால் செங்கம் குமார் என்கிற கோணத்தில் கட்சியை வைத்திருந்தார் தன்னை தாண்டி காங்கிரஸ் வளர்ந்துவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டார். தான் நடத்தும் கட்சி நிகழ்ச்சி என்றால் மட்டும் திராவிட கட்சிகள் ஸ்டைலில் பணம் கொடுத்து ஆட்களை கூட்டிகிட்டு வந்து பந்தா பண்ணுவார் இல்லாட்டி காங்கிரஸ் இருக்கிற இடமும் தெரியாது செங்கம் குமார் இருக்கற இடமும் தெரியாது இரண்டு பேரும் அவ்வளவு அமைதியாக இருப்பாங்க, தெற்கு மாவட்டத்தில் குமாருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம் அதிலும் கே.சி.அழகிரி பதவிபோன பிறகு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஆரம்பித்து மாநில நிர்வாகிகள் வரை எதிர்ப்பாளர்கள் அதிகம்!
திருவண்ணாமலையில் இருக்கும் காங்கிரஸ் சொத்தை நகர தலைவர் வெற்றிச்செல்வனுக்கு லீசுக்கு விட்ட விவகாரத்தால் மாவட்ட தலைவர் பதவ பறிபோய் மீண்டும் சில பல குறுக்கு வழிகளை கையாண்டு தெற்கு மாவட்ட தலைவர் பதவியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார் லேட்டஸ்ட் நிலவரப்படி காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையானவர்கள் குமார் வசமுள்ள தெற்கு மாவட்ட தலைவர் பதவியை பிடுங்க ஆர்வமாக இருக்கின்றனர் பதவியை காப்பாற்றிக்கொள்ள குமார் போராடிக்கொண்டு இருக்கிறார்.
அய்யம்பாளையம் குணசேகரன் செல்வப்பெருந்தகை ஆதரவாளர், மாவட்ட தலைவர் இல்லாட்டி செங்கம் எம்எல்ஏ சீட் இரண்டில் ஒன்று வேண்டும் என்கிறார். மார்க்கெட் குமார் கிருஷ்ணகிரி முன்னாள் எம்பி செல்வக்குமார் மூலம் மாவட்ட தலைவர் பதவிக்கு முயற்சி பண்ணுகிறார் நந்தகுமார் கடலூர் எம்பி விஷ்ணுபிரசாத் மூலம் பல ரவுண்டு செல்வப்பெருந்தகையிடம் பேசிவிட்டு வந்திருக்கிறார். செங்கம் குமார் எனக்கு இல்லாட்டி கீழ்நாத்தூர் காமராஜ், இளைஞரணி மோகன் இருவரில் ஒருவருக்கு கொடுங்கனு முனுமுனுத்துக்கொண்டிருக்கிறார்.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செங்கம் குமாரை மாற்றும் முடிவில் இருக்கிறார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பார்வையாளர், பூத் கமிட்டி விவகாரங்களை ஆய்வு பண்ண வந்த சங்கராபுரம் சீனுவாசன் கட்சியையும் கட்சிக்காரர்களையும் தேடிக்கொண்டிருக்கிறார். இதுதான் லேட்டஸ்ட் நிலவரம்!

-ஆலவாயர்