வட மாநில கொள்ளை சம்பவம் போல,கடலூரில் அரங்கேற்றம்…?ஒருவர் என்கவுண்டர் நான்கு நபர்கள் கைது…

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக கனரக வாகன ஓட்டிகள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்கள் லாரிகளை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் லாரி ஓட்டுனர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து விட்டு, அவர்களை அருவாள் கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளது.

காயமடைந்த ஓட்டுநர்கள் காளிமுத்து, மணிமாறன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக லாரி ஓட்டுநர்கள்  கூறுகையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அச்சத்தோடு வாகனங்களை இயக்குவதாகவும் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, எம். புதூர், ஆணையம் பேட்டை ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்கள் கடுமையாக தாக்கப்பட்டு செல்போன்கள் மற்றும் பணம் பறிக்கப்பட்டது அடுத்தடுத்து  அரங்கேறியதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரின் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார்,கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் எம் புதூர் அருகே குற்றவாளி மொட்டை விஜய் என்பவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் மொட்டை விஜயை பிடிக்க முற்பட்டபோது காவலர் கோபி, கணபதி இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார், தற்காப்புக்காக திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் விஜயை சுட்டு பிடித்தார்.

பின்னர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த காவலர்கள்  இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஒரு சிறார், ரியாஸ் அகமது, அன்பரசன் ரேவந்த் குமார், ஆகாஷ் ஆகியோரின் கைது செய்தனர்.

-முருகன் லட்சுமணன்