சரியும் செல்வாக்கு தவிக்கும் பொன்முடிரவுண்டு கட்டும் திமுக எம்எல்ஏக்கள்- விழுப்புரம் கள்ளக்குறிச்சி அதிர்ச்சி அரசியல்?

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினையை விதைத்துவிட்டு தினையை அறுக்க ஆசைப்பட்டால், தமிழக உயர்கல்வித்துறை மந்திரி பொன்முடியின் நிலைதான் ஏன் என்னாச்சு? பல வருடங்களாக விழுப்புரத்தை மையமக கொண்டு மாவட்டம் முழுவதும் திமுகவில் செல்வாக்கோடு கோலோச்சிக் கொண்டு இருந்த மந்திரி பொன்முடி திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமான தன் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மந்திரி சபையில் நல்ல பதவியை வாங்கிக்கொண்டு, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாண்டிச்சேரியிலும் பெரிய அளவில் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்ட பொன்முடிக்கு செலவு பண்ண தெரியாது. கட்சித் தலைமையுடன் தனக்கிருந்த நெருக்கத்தை வைத்துக் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவில் வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரையும் வளரவிடாமல் சாமர்த்தியமாக பார்த்துக் கொண்டவர், செஞ்சி ராமச்சந்திரன், முகையூர் ஏ.ஜி.சம்பத், திண்டிவனம் மாசிலாமணி, அரசூர் பாலு, விழுப்புரம் வழக்கறிஞர் தயாநிதி, சிந்தாமணி ஜெயராமன், செஞ்சி நடராஜன், அன்னியூர் சிவா, இப்படி வன்னியர் சமுதாயத்தில் பொன்முடியால் காணாமல் போனவர்களின் பட்டியல் மிக பெரியது.

பொதுமக்கள், திமுகவினர் மத்தியில், செல்வாக்குடன் இருந்த பல தலைவர்களை ஓரங்கட்டி திமுகவிலிருந்தே வெளியேற்றிவிட்டார். திமுக தலைமையும் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்தது. பண்ணையார் டைப் அரசியலை செயல்படுத்தும் பொன்முடி, திமுக நிர்வாகிகளை அடிமைகளைப் போல நடத்துவார் தன் எதிரில் உட்காருவதைகூட அனுமதிக்கமாட்டார், பல வருடங்களாக திமுக நிர்வாகிகள் பொறுத்துக் கொண்டு பெயரளவிற்கு அரசியல்வாதிகளாக இருந்தனர்.

கட்சி நிர்வாக வசதிக்காக திமுக தலைமை மாவட்டங்களை பிரித்தபோது பொன்முடியின் பல வருட ஆத்மார்த்த சிஷ்யன் செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளராகி முதல் ஆளாக முறைக்க ஆரம்பித்தார். இன்னொரு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அங்கையற்கன்னியை அடையாளம் காட்டி அரசியல் பண்ணாமல் பார்த்துக் கொண்டார் பொன்முடி. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியை அடையாளம் காட்டினார் இன்றைய நிலவரப்படி பொன்முடியின் ஒரே ஆதரவாளர் மாவட்ட செயலாளர் புகழேந்தியாகத்தான் இருப்பார். விழுப்புரம் பொன்முடி என்று பெருமையோடு வலம் வந்த பொன்முடியை சி.வி.சண்முகம் பிரதர்ஸ், திருக்கோயிலூர் தொகுதிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க, திமுக தலைமையின் நேரடிப் பார்வையில் அதிமுகவிலிருந்து வந்த டாக்டர் லட்சுமணனை விழுப்புரத்தில நிற்க வைத்து எம்எல்ஏ ஆக்கிட்டாங்க, நிறைய செலவு செய்வதாலும், திமுகவினரை அனுசரித்து போவதாலும் டாக்டர் லட்சுமணன் தன்னுடைய செல்வாக்கை படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக்கினர். பொன்முடியின் திருக்கோயிலூர் தொகுதியில் பனிரெண்டு பஞ்சாயத்துகள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேருது, மீதி தொகுதி முழுவதும் விழுப்புரம் மாவட்டத்தில் சேருது உயர்கல்விதுறை மந்திரி ஆனவுடன் பொன்முடி பழைய நினைப்புல கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள் போக, உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன், சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்னும் மந்திரி போடல, எங்கள் மூவரில் ஒருவருக்கு கிடைக்கும் எங்க மாவட்டத்தை நாங்க பார்த்துக்கறோம் நீங்க விழுப்புரம் மாவட்டம்தானே? அங்கே போங்க என்று பொன்முடியை எதிர்த்ததோடு அவருடைய நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவும் செய்தனர். அதையும் மீறி சில நிகழ்ச்சிகளுக்கு பொன்முடி வந்து போனார் கள்ளக்குறிச்சி திமுக எம்பியாக இருக்கும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி அப்பாவுக்கு வரவேற்பு கொடுக்கச் சொல்வார். மணிக்கண்ணன், உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, போஸ்டர், நாளிதழ், பேனர் விளம்பரங்களில் பொன்முடி பெயரையும் படத்தையும் போடுவதை தவிர்த்தனர். விஷயம் அறிவாலயம் வரை பஞ்சாயத்து ஆனது விசாரணையும் வைக்கல, தீர்ப்பும் சொல்லல, நாம எந்த மாவட்டத்துக்கு மந்திரி என்ற குழப்பத்தில் மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் பக்கம் திரும்பினால், மந்திரி மஸ்தான் முறைக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பக்கம் திரும்பினால், நீங்களும் வராதீங்க நாங்களும் வரமாட்டோம் என்று மூன்று எம்எல்ஏக்களும் ரவுண்டு கட்றாங்க, நடுவுல ஒருமுறை ஞாபக மறதியா திருக்கோயிலூர் பக்கம் வந்திட்டு போனாரு அதுக்குள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கட்சி பணிகளை செய்யவும், அரசு திட்டங்களை செயல்படுத்தவும் மந்திரி எ.வ.வேலுவை பொறுப்பாளராக நியமித்தார். சில தினங்கள் அமைதியாக விழுப்புரம் வீட்டிலிருந்த பொன்முடி அதன்பிறகு சென்னை கிளம்பிட்டார். மந்திரி மஸ்தான் ஒருபக்கம், விழுப்புரத்தில லட்சுமணன் எம்எல்ஏ ஒரு பக்கம், பக்கத்து மாவட்டத்தில மூன்று எம்எல்ஏக்களும் ஒற்றுமையா இருக்காங்க, பழையபடி அரசியல் பண்ண முடியல, கௌதம சிகாமணி எம்பியும் இருக்கற இடம் தெரியாம இருக்கிறார். அவசியம்னா ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பக்கம் போயிடறார். தமிழ்நாட்டுக்கே உயர்கல்வித்துறை மந்திரி பொன்முடி சொந்த கட்சியில சொந்த மாவட்டத்தில அரசியல் பண்ண முடியாம தவிக்கிறார். எல்லாம் சில காலம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்?