அம்பேத்குமாரா… சுந்தர் கருணாநிதியா?வந்தவாசி தனி தொகுதி நிலவரம்!

இரண்டாவது முறை திமுக எம்எல்ஏ ஆகி இருக்கும் அம்பேத்குமார் வழக்கம்போல வெற்றிக்கு உழைத்த திமுகவினர், ஓட்டுபோட்ட வாக்காளர்கள் இருதரப்பிற்கும் விசுவாசமாய் இல்லை என்பது பட்டவர்த்தனமாய் தெரிகிறது. வந்தவாசி ஒன்றியத்தில் ஆராசூர்தான் அம்பேத்குமாருக்கு பூர்வீகம் ஆனால் சென்னையில் செட்டிலாகிட்டார். சினிமா தயாரிப்பாளர், பில்டர்ஸ் வலுவான பணம் புரளும் இரண்டு தொழிலுக்கு சொந்தக்காரர்.
கடந்தமுறை அதிமுக தரப்பில் மேகநாதன், இந்தமுறை அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் பிரபுசங்கர், இரண்டு வேட்பாளர்களும் பலவீனமானவர்கள் என்பதால் அம்பேத்குமார் பாஸ் பண்ணிவிட்டார் என்கின்றனர் தெள்ளாரில் நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள்.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை அம்பேத்குமாரும் ஞாபகம் வச்சிக்கல, ஓட்டுபோட்ட மக்களும் ஞாபகம் வச்சிக்கல. இருதரப்பும் எளிதாக மறந்துட்டாங்க ஆனா பாருங்க நாங்க மறக்கல என்கின்றனர் பெரணமல்லூர் திமுகவினர்! தொகுதிக்கு வர்றதும் தெரியாது போறதும் தெரியாது வாம்மா மின்னல் மாதிரி உடனடியாக மாயமாகிவிடுவார், அம்பேத்குமாரை தொகுதியில பார்த்தால் அன்று டெண்டராக இருக்கும் கமிஷனுக்காக ஆஜராகி இருப்பார், இல்லாட்டி அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சியாக இருக்கும். மாவட்ட செயலாளரும் ஆரணி தொகுதி எம்பியுமான தரணிவேந்தனுக்கும் அம்பேத்குமாருக்கும் சுத்தமாக ஆகாது. அடிக்கடி உரசிக்கொள்வார்கள். அரசு நிகழ்ச்ச்சிகளில் அதை அடிக்கடி வெளிப்படுத்துவார் அம்பேத்குமார்.
இப்பொழுது எம்பியாகி விட்டதால் திமுகவினர் மத்தியில் உயர்ந்து நிற்கிறார் தரணிவேந்தன்! ஆனாலும் அவருடன் உரசல் போக்கை கைவிடாமல் தொடரும் அம்பேத்குமார் ஒன்றிய செயலாளர்களோடு நல்லுறவு பாராட்டுவதுபோல காட்டிக்கொள்கிறார் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத தேசூர் பேரூர் கழக மூத்த திமுக பிரமுகர் ஒருவர்.
இரண்டு முறையும் எம்எல்ஏ சீட் வாங்கியதற்கு தரணிவேந்தன் எம்பியும் அமைச்சர் எ.வ.வேலுவும்தான் காரணம்! இவர்கள் இருவரிடமும் லேட்டஸ்ட் நிலவரப்படி உறவு சரியாக இல்லை, அறிவாலயத்தோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதோடு, மூன்றாவது முறையும் எனக்குத்தான் எம்எல்ஏ சீட் என்று சொல்லுகிறார் என்று நம்மிடம் பேசிய பெயர் சொல்லவிரும்பாத வந்தவாசி நகரமன்ற உறுப்பினர். இதெல்லாம் தரணிவேந்தன் அமைச்சர் எ.வ.வேலு காதுக்கு எட்டியிருக்கிறது அனேகமா மறுபடியும் அம்பேத்குமாருக்கு சீட் கிடைக்கிறது கஷ்டம். புதியவர்களை மனதளவில் தேட ஆரம்பிச்சிட்டாங்க தொகுதியிலுள்ள பெரும்பான்மை திமுகவினர்.
யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்டார், தொகுதியில நடக்குற நல்லது கெட்டதுல கலந்துக்கமாட்டார் விடுதலை சிறுத்கைகள் சிலரோடு நெருக்கம் காட்டும் அம்பேத்குமார், திமுகவினரோடு அதிகம் நெருக்கம் காட்டுவதில்லை. தரணிவேந்தனும் பாமகவிலிருந்து வந்தவர்களுக்கு அதிகமா முக்கியத்துவம் தருகிறார். அப்படீன்னா… திமுகவே கதியென கிடக்கும் எங்க கதி? என்ன ஆகிறது என்று கேள்வி எழுப்புகிறார் முன்னாள் எம்எல்ஏ ஒருவர்.
வந்தவாசி தனி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாரின் மக்கள் பணி நிலவரம் இப்படி கலவரமாய் இருக்க, மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுந்தர்கருணாநிதி ஆகியோர் அடுத்த எம்எல்ஏ கனவுல மிதக்கறாங்க, இதில கமலக்கண்ணன் மீது வம்பு வழக்குகள் இருக்கு அதனால கமலக்கண்ணன் ரிஜெக்ட் ஆகிறார். லோகநாதனுக்கு வாய் ரொம்ப நீளம், மூடு வந்தா தரணிவேந்தனையும் அமைச்சர் எ.வ.வேலுவையும் கண்டபடி கும்பாபிஷேகம் நடத்துவார் கோபத்தில வாயாலே துவைச்சி காயப்போடுவார் என்று உடன்பிறப்புகள் அலறுகின்றனர்.
சுந்தர் கருணாநிதி புதியதாக பதவிக்கு வந்திருக்கிறார். இவர் தரணிவேந்தன் அமைச்சர் எ.வ.வேலுவின் சாய்ஸ்! இவரை எம்எல்ஏ சீட்டுக்கு தயார்படுத்துவதாக வந்தவாசியில் அழுத்தமான தகவல்கள் உலா வருகிறது இதெல்லாம் உண்மையா… ஆக அம்பேத்குமாருக்கு பதிலாக சுந்தர் கருணாநிதி…?
– கலாவதி கணேசன்