திமிங்கல உமிழ்நீர் …தூக்கி வீசிய நபர்கள்,விரட்டி பிடித்த போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்ட எல்கையான ஆரல்வாய்மொழி அருகே போலீசார் வாகன சோதனையின் போது 5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அதனை தூக்கி வீசி விட்டு தப்பி சென்றதால் பரபரப்பு வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆரல்வாய்மொழி போலீசார் அதனை ஒப்படைத்தனர்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதனையும் தலைக்கவசம் அணியாமல் செல்வதனையும் கட்டுப்படுத்துகின்ற விதத்தில் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தும் வந்த நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் தலைமை காவலர் ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் போலீசார் சகாயநகர் விலக்கிலிருந்து லாயம் செல்லுகின்ற சாலையில்  ஸ்ரீகுமார்நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது செண்பகராமன்புதூரில் இருந்து சகாயநகர் விலக்கு நோக்கி நம்பர் பிளேட் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது ஸ்ரீகுமார்நகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டதும் வந்த வேகத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பி மீண்டும் செண்பகராமன்புதூர் நோக்கி செல்ல தொடங்கினார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அந்த இரு சக்கர வாகனத்தை துரத்தி செல்ல தொடங்கினர் திடீரென்று இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருந்த வாலிபர் அவர் வைத்திருந்த ஒரு சாக்கு மூட்டையினை சாலையின் ஓரத்தில் தூக்கி எறிந்து விட்டு வேகமாக செல்ல தொடங்கினர் இதனைப் பார்த்த உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் மேலும் சந்தேகம் அடைந்த நிலையில் சாக்கு மூட்டை தூக்கி வீசப்பட்ட இடத்தில் சென்று சாக்கு முட்டையை திறந்து பார்த்தபொழுது அதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் போன்று தெரிய வந்தது.இதனிடையே இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரண்டு நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.இதனால் போலீசார் உடனடியாக சாக்கு மூட்டையினை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இது சம்பந்தமாக மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வன அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் பூதப்பாண்டி வனசரகர் அறிவுறுத்தலின்படி  வனகாப்பாளர் சிவக்குமார் மற்றும் வன ஊழியர்கள் காவல் நிலையம் வந்து ஆரல்வாய்மொழி போலீசாரால் கைப்பற்றப்பட்ட 5.6 கிலோ திமிங்கலம் உமிழ்நீரினை பெற்றுக் கொண்டனர் மேலும் வனத்துறையினரின் முதல் கட்ட விசாரணையின் படி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் திட்டுவிளை மற்றும் தடிக்காரகோணம் பகுதியை சார்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற பொருள்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதால் இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர் யார் என்பது பற்றியும் இங்கிருந்து கடத்தப்படுகின்ற இப்பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திமிங்கல உமிழ்நீரானது எங்கிருந்து எடுக்கப்பட்டு யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரு நபர்களை பிடித்தால் தான் தெரியும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
– பா.மனோகரன்