நகரத்தில் இருப்பவருக்கு கிராமத்தில் பதவியா? அதை கிராமத்தில் இருக்கும் நாங்களெல்லாம் வேடிக்கை பார்க்கணுமா? கிராமத்தில் உள்ள எங்களில் ஒருவருக்குதான் பதவி உங்க விருப்பத்திற்கு யாரை ஒன்றிய செயலாளரா போட்டாலும் அவருக்கு கீழே எங்களால வேலை செய்ய முடியாது என்று இருபத்தியோரு பஞ்சாயத்தை அதிமுகவினர் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணிக்கு எதிராக எதிர்ப்பு கொடி பிடிக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுக்குட்பட்ட கந்திலி கிழக்கு ஒன்றியத்தில்தான் இந்த கொந்தளிப்பு!
கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். பொறுப்பு ஒன்றிய செயலாளராக மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.மணிகண்டனை அறிவித்தனர். அவரும் கட்சி நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தினார். கடந்த நான்கு மாதங்களில் இருபது பேர் பட்டியல் தயார் பண்ணி வச்சிகிட்டு தயாராக இருந்தனர். கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த எங்களில் ஒருவருக்கு கொடுங்கள் என்பதுதான் அதிமுகவினரின் கோரிக்கையாக இருந்தது. திடீரென திருப்பத்தூர் நகரத்தில் வசிக்கும் தொழிலதிபர் டி.டி.சங்கர் என்பவரை கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளரா அறிவிக்க, திருப்பத்தூர் தொகுதி அதிமுகவினர் மத்தியில் பதட்டமும் டென்ஷனும் கூடிவிட்டது. ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவர், கே.சி.வீரமணிக்கு நிழலாக இருப்பவர், பினாமி என்றும் சொல்லுகிறார்கள் இவரை பினாமி சங்கர் என்றே அழைக்கிறார்கள். நகர பாசறை செயலாளர் பதவியே சங்கருக்கு அதிகம்! இதில ஒன்றிய செயலாளர் பதவி வேறயா? இன்னும் சொல்லப்போனா அதிமுகவுக்கும் சங்கருக்கும் என்ன சம்பந்தம்? கே.சி.வீரமணிக்கு எடுபிடி வேலை செஞ்சா நினைச்ச பதவி கிடைக்குமா… அப்படீன்னா கட்சியே கதினு கிடக்கிற எங்க கதி? என்ன ஆகிறது? கந்திலி கிழக்கு ஒன்றியத்தில வன்னியர்கள் அதிகம், ஆதிதிராவிடர்கள் குருமன்ஸ், வெள்ளாளகவுண்டர்கள் என்று புள்ளி விபரம் போகுது இங்கே சங்கர் வந்து என்ன பண்ணப்போறார்? கே.சி.வீரமணி ஆதரவு இருந்தா போதுமா எங்க ஆதரவு வேண்டாமா? என்ன ஆச்சி எங்க கட்சிக்கு? என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்டிங்போட்டு, புதிய ஒன்றிய செயலாளர் சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சங்கரை எடுத்துவிட்டு கட்சிக்கு உழைத்த எங்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் ஒருபோதும் சங்கர் தலைமையில் எங்களால் வேலை செய்ய முடியாது எங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போறோம் என்று எதிர்ப்பாளர் கூட்டத்தில் கோப உரை வீச்சு நடத்தினர். நகரத்தில இருந்து கிராமத்துக்கு வருவ நீ ஆம்பளை… அதை வேடிக்கை பார்க்க, உன்னை அப்படியே ஏத்துகிட்டு வரவேற்க, நாங்க புடவை கட்டிகிட்டு இருக்கோமா… போன் பண்ணா எடுக்க மாட்ட, நல்லது கெட்டதுல கலந்துக்க மாட்ட, நீ பணக்காரன்னு பேரு ஆனா கட்சிக்கே கட்சிக்காரனுக்கோ செலவு பண்ண மாட்ட… உன்ன¬ எப்படி நாங்க ஏத்துக்க முடியும்? என்று சங்கருக்கும் கே.சி.வீரமணிக்கும் எதிரா கொந்தளிக்கின்றனர். சங்கர் வளர்ச்சியை விரும்பாத திருப்பத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இந்த விஷயத்தில மறைமுகமா எண்ணெயை ஊற்றி பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டு இருக்கின்றனர் என்கிற தகவல் தொகுதி முழுக்க பரவிக்கிடக்கிறது. விஷயம் ஏதோ வேற மாவட்டத்தில நடக்கிறதா நினைச்சுகிட்டு மாவட்டம் கே.சீ.வீரமணி அமைதி காக்க, புதிய ஒன்றிய செயலாளர் சங்கர் பதினைந்து கோடியை ஒருமுறைக்கு இருமுறை எண்ணி வச்சிட்டாராம் எதுக்கு? வர்ற தேர்தல்ல எம்எல்ஏ சீட் இவருக்குதானாம் ஓட்டுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய்வரை கொடுக்க தயாராகி விட்டாராம்.
ஆனால், கந்திலி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டுக்கு பிறகு ஒரு சுப தினத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து முறையிட தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆக மாவட்டம் வீரமணி குறுக்குவழி தப்பாட்ட அரசியலுக்கு தாராளமாக தன் மனக்கதவை திறந்து விட்டிருக்கிறார் போல…
கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு காத்திருக்கும் அதிமுகவினரின் பட்டியல்…, ஒன்றியதுணைச் செயலாளர் முன்னாள் சேர்மன் வி.டி முருகன், ஒன்றிய கழகப் பொருளாளர் கேசவன் முன்னாள் கவுன்சிலர், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள் முன்னாள் கவுன்சிலர், முன்னாள் துணை சேர்மன் பூபதி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பாசறை செயலாளர் திருப்பதி, மறைந்த ஒன்றிய கழகச் செயலாளர் கே ஜி ரமேஷ் அவர்களின் தம்பியும் முன்னாள் ஊராட்சி காக்கங்கரை செயலாளர், முன்னாள் மாவட்ட சேர்மன் சுப்பிரமணியம், நத்தம் ராமநாதன், நத்தம் சபரிநாதன், குனிச்சி மோகன், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் ஆதியூர் ஜெகன், எலவம்பட்டி குமரன், தொழிலதிபர் ஸ்ரீதர், செவ்வத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா, ஒன்றிய துணைச் செயலாளர் மீஜ் மாவட்ட கவுன்சிலர் மணி, பள்ளத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை இப்படி நீளுது.
– ஆலவாயர்
—
பினாமி சங்கர் ஒன்றிய செயலாளரா….கொந்தளிக்கும் அதிமுகவினர்!- திருப்பத்தூர் நிலவரம்
