ஆம்பூர்-
அரசு மருத்துவர் வீட்டில்,
150 சவரன் தங்கம் மற்றும் பணம் கொள்ளை …
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரசு மருத்துவர் இளம்தென்றல். இவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கடலரசியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலரிசி திடீரென அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவர் கடலரசி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கடலரசியின் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மருத்துவர் இளந்தென்றல் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று ஜாமின் பெற்றுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று இளந்தென்றலின் தாய் தந்தை இருவரும் வீட்டிற்க்கு வந்து பார்த்த போது பூட்டிய வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக காவல்துறை கட்டுப்பாடு எண் 100 என்ற எண்ணுக்கு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் மருத்துவர் இளந்தென்றல் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர். அப்போது வீடு பூட்டிய நிலையில் இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நேற்று மருத்துவர் இளந்தென்றலின் தாய் மற்றும் தந்தை இருவரும் வீடியோ கேமரா உடன் வந்து வீட்டை திறந்து உள்ளே சென்றதாகவும், இளம் தென்றலின் தந்தை கிருஷ்ணமூர்த்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசார் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக வீட்டின் முன்பு காத்திருந்து யாரும் வராததால் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.
மேலும் மருத்துவர் மனைவி தற்கொலை வழக்கில் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்து நேற்று ஜாமீன் பெற்று வந்த அரசு மருத்துவரின் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது உண்மையா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-திருமலை