மகாராஷ்டிர குரோதம்

ஒரு நடிகரின் மகன் போதை வழக்கில் கைதானது மகாராஷ்டிர அரசியல் வானில் பலத்த சூறாவளியை எழுப்பியுள்ளது.  கடந்த அக்டோபர். 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு  கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்ட்டி நடைபெறுவதாக என்சிபி அதிகாரிகள் தகவல் கிடைத்தது. மாறுவேடத்தில் கப்பலில் ஏறி அதிரடி சோதனை நடத்திய என்சிபி அதிகாரிகள், அங்குப் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்திய  ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை கைது செய்தனர். .

ஆர்யன் கான் சிறையில் இருந்த போது பல்வேறு பிரபலங்களும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கூட ஷாருக் கானுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், ஆர்யன் கான் சிறையில் இருந்த போது காங்கிரஸின் ராகுல் , ஷாருக் கானுக்கு எழுதிய கடிதம் வெளியானது. அந்த கடிதத்தில், ‘ தேசமே உங்களுடன்.  எந்தச் சிறுவனும் இப்படி நடத்தப்படக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்டோர் ரூ25 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக நடிகர் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதே பணம் பறிப்பதற்கான கடத்தல் சம்பவம்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன்  சாம் டிசோசா என்பவர் தொலைபேசியில் பேசிய உரையாடல்களையும் நவாப் மாலிக் வெளியிட்டார். வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க ஹவாலா மூலம் பணம் கொடுத்ததாக சாம் டிசோசா கூறியுள்ளார்.

மேலும், ‘சர்ச்சைக்குரிய சொகுசு கப்பலில் பயணம் செய்வதற்கு ஆர்யன் கான் டிக்கெட் கூட வாங்கவில்லை. ஆர்யன் கானை சொகுசு கப்பலுக்கு அழைத்தவர்கள் பிரதிக் கபா, அமீர் ஆகியோர்தான். ஆர்யன்கானை கடத்தி பணம் பறிக்கத்தான் அவர் சொகுசு கப்பலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பாஜகவின் மொகித் இந்த கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் கூட்டாளியாக செயல்பட்டது மொகித் கம்போஜ்தான்’ என்றும் கூறியதோடு விட்டுவிடாமல், மாநில முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். 

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளித்த பட்னாவிஸ், ‘நவாப் மாலிக்குக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை பின்னர் வெளியிடுகிறேன்’ என்றார்.ஆக, மகாராஷ்டிராவில் நடிகைகள் – போதை கும்பல் தொடர்பு பிரச்சினைக்கு பிறகு, இந்த சொகுசு கப்பல் போதை கும்பல் விவகாரம்  விசுவரூபம் எடுத்துள்ளது.