1989ல் ஆரம்பித்து 2021 வரை எட்டுமுறை எம்எல்ஏ சீட் கொடுத்து கு.பிச்சாண்டியை கௌரவப்படுத்தி இருக்கிறது திமுகவின் அறிவாலயம்! அதில் இரண்டுமுறை தோல்வியை சந்தித்திருக்கிறார். 1991ல் ராஜுவ்காந்தி படுகொலை, 2011ல் திமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, கூட்டணி தர்மத்தை மீறி பாமகவினர் அதிமுக வேட்பாளர் ஏ.கே.அரங்கநாதனை சாதி ரீதியாக அரவணைக்க, ஆக இரண்டுமுறை 1996 – 2001ல் வீட்டுவசதித்துறை அமைச்சர் இப்பொழுது, கீழ்பென்னாத்தூரில் எம்எல்ஏ கூடவே துணை சபாநாயகர் என்கிற அடையாளமும்.
பொறுமை, சகிப்புத் தன்மை இரண்டு விஷயங்களைப்பற்றி கு.பிச்சாண்டியை புத்தகம் எழுத சொல்லலாம் அதற்கு நூறு சதவீதம் பொறுத்தமானவர், மேற்படி இரண்டு தலைப்பிலும் வகுப்பு எடுக்கச்சொல்லலாம் அதற்கும் பொறுத்தமானவரே! அதிகமாக பேசமாட்டார், இளைஞர் பருவத்திலிருந்து திமுகவில் தயாரானவர் திருவண்ணாமலையில் திமுகவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவர், காலதேவன் திருவிளையாடல் திருவண்ணாமலையில் இருந்து கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுகவினர் என்ன சொல்கிறார்கள்…? கு.பிச்சாண்டி நல்ல மனுஷன், கட்சிக்காரன்கிட்ட கை நீட்றதில்ல தொகுதி மக்களிடமும் அப்படியே! ஒப்பந்த பணிகளை நிர்வாகிகளை கூப்பிட்டு கொடுத்து விடுகிறார் கட்சிப்பணிகளை பார்த்துக்கோங்க என்று ஒரு வார்த்தை சொல்லி விடுகிறார். தன் தரப்பில் நூறு சதவிதம் நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை, துணை முதல்வர் உதயநிநிதி ஸ்டாலின் வருகை போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு பையில பணத்தை மூட்டை கட்டி எடுத்துகிட்டு வந்திடுவார். போஸ்டர் விளம்பரம், பேனர் விளம்பரம் பத்திரிகைகளில் விளம்பரம், கொடி தோரணம், ஆட்களை திரட்டுதல் என தன் பங்கிற்கு ஒரு தொண்டனைப் போல முழு ஈடுபாட்டோடு செய்வார்.
கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சளைக்காமல் போய் ஐநூறு, ஆயிரம் என்று மொய் எழுதிட்டு வருவார் ஊர்ல இருந்தார்னா திருவண்ணாமலையில் உள்ள வீட்டில் காலையும் மாலையும் பார்க்கலாம். தொகுதிவாசிகளையும் திமுக தொண்டர்களையும் மிகுந்த மரியாதையோடு நடத்துவார் முறையாக பதில் சொல்லுவார், வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கீழ்பென்னாத்தூரிலுள்ள சட்டமன்ற அலுவலகத்தில் பார்க்கலாம் எல்லாம் சரி! தொகுதியிலுள்ள ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள், யூனியன் சேர்மன், பேரூராட்சி தலைவர்களை முழுமையாக நம்பினார்… அவர்கள் கேட்டதை செய்துகொடுத்தார் எதிலும் தலையிடுவதில்லை. விளைவு தொகுதியில் மூளை முடுக்கெல்லாம் இன்டு இடுக்கெல்லாம் கு.பிச்சாண்டி நம்பிய திமுக நிர்வாகிகளால் ஓயாத பஞ்சாயத்து திமுகவினர் மத்தியில் அதிருப்தி அலையடிக்குது.
முதல்ல வேட்டவலம் பேரூராட்சியில் இருந்து ஆரம்பிக்கலாம்…, கௌரி நடராஜன்தான் தலைவர் இவர் பேரூர் கழக செயலாளர் முருகையனால் அடையாளம் காட்டப்பட்டவர், இவங்க இருவரும் ஒரு அணியாகவும், ஒட்டுமொத்த திமுகவினர் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர் அடிக்கடி பஞ்சாயத்து… முட்டை மந்திரத்தை தவிர எல்லா மந்திரத்தையும் உபயோகப்படுத்தி பார்த்தார் பிச்சாண்டி, ஒரு பலனும் இல்லை. வேட்டவலம் திமுக அரசியலில் டென்ஷனும் பதட்டமும் பரவி கிடக்கு, கீழ்பென்னாத்தூர் தொகுதியில வேட்டவலம் தனி மாநிலம்! அதில முருகையன் கவர்னர் மாதிரியே நடந்துகொள்கிறார் என்பது உடன்பிறப்புகளின் குமுறல்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான ஆராஞ்சி ஆறுமுகம் யூனியன் சேர்மன் அய்யாகண்ணுவுக்கு செலவுக்கு கொடுத்திட்டு, யூனியனை லீசுக்கு எடுத்துகிட்டார் துணைவியார் வாசுகி துணை சேர்மன் என்பது கூடுதல் தகவல்! அதிகமாக சம்பாதித்தவர், தாராளமாக செலவு செய்தவர் என்கிற பெயர் ஆராஞ்சி ஆறுமுகத்திற்கு உண்டு. அய்யன் கன்ஸ்ரக்ஷன் நிறுவனமே அதற்கு சாட்சி! கோடிகளில் மிதக்கும் ஆராஞ்சி ஆறுமுகத்தின் ஒரே லட்சியம் பிச்சாண்டிக்கு சீட் இல்லைனா நமக்குதான் என்கிற நம்பிக்கையில் ரவுண்ட்ஸ் வருகிறார். கழிகுளம் ல.பெரியசாமியின் சிஷ்யன் இவருக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எ.வ.வேலு கருணைப் பார்வையும் உண்டு என்கிறார்கள் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய உடன்பிறப்புகள். ஆராஞ்சி ஆறுமுகம் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். ஆனால் இவர் விஷயத்தில் கு.பிச்சாண்டி உற்சாகமாக இல்லை என்பது உண்மை.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியை பொறுத்தவரை பன்னீர்செல்வம், அன்பு பிரதர்ஸ் கைகளில் கட்சி அடக்கம். பன்னீர்செல்வம் மைத்துனர் சரவணன் பேரூராட்சி தலைவர், இவருக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் அன்பு மயம்! பிராந்தி பாட்டில்களை வாங்கிகிட்டு வந்து தனியா வியாபாரம் பண்றதில சரவணன் கில்லாடியாம் பல வருடங்களா இந்த தொழில் செய்கிறாராம் பேரூராட்சி எல்லையை தாண்டி சரவணன் வியாபாரத்தை பற்றி பேசுகிறார்கள். பன்னீர்செல்வம் பிரதர்ஸ் கட்சிக்குள் புதியதாக யாரும் வருவதை விரும்பவில்லை. கேஸ் ஏஜென்சி ராஜேஷ் என்பவர் அமைச்சர் எ.வ.வேலு, கோவி.செழியன் இருவருக்கும் வேண்டப்பட்டவர் அவரை ஓரங்கட்டிட்டாங்க. மொத்தத்தில பிச்சாண்டி நம்பிக்கை கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியிலும் வீண் போனது.
துரிஞ்சாபுரம் யூனியன் சேர்மன் தமயந்தி ஏழுமலை, துணை சேர்மன் சதாசிவம் இருவரும் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள்… திருப்தியாக சம்பாதித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். ராமஜெயம், அண்ணாமலை என்று இரண்டு ஒன்றிய செயலாளர்கள் இதில அண்ணாமலை பழைய கட்சிக்காரர் பங்கு பரிவர்த்தனையில் காட்டிய அக்கறையில் துளிகூட திமுக தொண்டன் மீது காட்டியதில்லை அவ்வளவு ஏன் தொண்டனுக்கு ஒரு டீ கூட வாங்கி கொடுத்ததில்லையாம். எம்எல்ஏ சீட்டு வன்னியருக்கு என்றால் எனக்குத்தான் என்று தூக்கத்தில உளறிக்கொண்டு இருக்கிறாராம். இன்னொரு ஒன்றிய செயலாளர் ராமஜெயம், இவர் மீது துரிஞ்சாபுரம் ஒன்றிய திமுகவினர் கடும் கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். ராமஜெயத்திற்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? கட்சிக்கு துளிகூட சம்பந்தம் இல்லாத ராமஜெயத்தை ஒன்றிய செயலாளர் ஆக்கியது யார்? கந்துவட்டி வியாபாரி மாதிரி நடந்துக்கறார் திமுகவினரா இருந்தாலும், கமிஷன் கொடுத்தால்தான் வேலை என்று கூவி கூவி விற்கிறார் இவர் மீது பிச்சாண்டியிடம் பலமுறை புகார் போயிருக்கிறது.
பிச்சாண்டி நல்லவர், தொகுதியில அவர் நம்பிய நிர்வாகிகள் ஒருவரும் அப்படி இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. மீண்டும் பிச்சாண்டி போட்டியிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் சுதி இல்லாமல் பேசுகிறார்கள். ஒருவேளை பிச்சாண்டிக்கு கீழ்பென்னாத்தூரில் மீண்டும் சீட் கிடைக்காமல் போனால் திருவண்ணாமலையில் முப்பதாயிரம் ஓட்டு குறைந்துவிடும் என்று சொல்லி நம்மை முறைத்தார். பிச்சாண்டியின் உடன்பிறப்பு கருணாநிதி மாநில பொறியாளர் அணி பொறுப்பில் இருக்கிறார். மேலிடத்தில் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் கருணாநிதி போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.
பிச்சாண்டி மீண்டும் போட்டியிடுவார் என்று சொன்னாலும், ஆராஞ்சி ஆறுமுகம் இப்பவே எம்எல்ஏ மாதிரி நடந்துக்கறார். கருணாநிதியும் மனதிற்குள் ஆசையோடு இருக்கிறார். ஆனால் பிச்சாண்டி மட்டும் டென்ஷனில் இருக்கிறார் காரணம் தொகுதி நிலவரம் அப்படி.
– ஆலவாயர்
பிச்சாண்டியா…ஆராஞ்சி ஆறுமுகமா…கருணாநிதியா…- கீழ்பென்னாத்தூர் நிலவரம்
