நான்குமுறை எம்எல்ஏவாக இருந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர், மாநில அளவில் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவர் அறிவலயத்து பிரபலம் கலசபாக்கத்தார் என்று மூத்த திமுக தலைவர்களால் அழைக்கப்பட்டவர் பெ.சு.திருவேங்கடம் அவரின் வாரிசான பெ.சு.தி.சரவணன் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சிட்டிங் எம்எல்ஏ! நீண்ட இடைவெளிக்கு பிறகு கலசபாக்கம் தொகுதி உதயசூரியன் சின்னத்தை பார்த்ததால் உடன்பிறப்புகள் மத்தியில் அளவில்லாத உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர் என்கிற அழுத்தமான முத்திரை பெ.சு.தி.சரவணனுக்கு உண்டு.
கலசபாக்கம் தொகுதியில் சரவணன் ஜெயிச்சது கூட பெரிதில்லை அளவில்லாமல் ஆட்டம்போட்ட திமுக நிர்வாகிகள், குறிப்பா ஒன்றிய செயலாளர்கள் இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். நான்தான்டா எம்எல்ஏ என்று ஒரு ஒன்றிய செயலாளர் திமுகவினரிடம் ஓவராக படம் ஓட்ட ஆரம்பித்தார் மற்றவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் கலெக்ஷன் பயணத்தில் இறங்கிவிட்டனர் பெ.சு.திருவேங்கடம், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு மூவரிடமும் கற்ற பாடத்தை பொறுமையாக ஒன்றிய செயலாளர்களிடம் அப்ளை பண்ணி முழுக்க முழுக்க தன் வசம் கொண்டு வந்த சரவணன், அவர்களின் கோரிக்கைகளை முகம் சுளிக்காமல் மனமுவந்து செய்து கொடுத்தார். ஒன்றிய செயலாளர், பேரூர் கழக செயலாளர் இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் நிர்வாகிகளையும் அழைத்து வைத்துக்கொண்டு வேலைகளை பிரித்து கொடுத்தார் அதனால், கீழ்மட்ட திமுகவினருக்கு ஏக சந்தோஷம்!
நிர்வாகிகள் முதற்கொண்டு கீழ்மட்டத்திலுள்ள தொண்டர்கள் வரை நேரிடையாக பேசி கோரிக்கைகளை மனுக்களாக பெற்று மூட்டைக்கட்டிக்கொண்டு அமைச்சர் எ.வ.வேலுவிடம் போய் நிற்பார், தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை வழக்கம்போல மூட்டை கட்டிக்கிட்டு போய் அமைச்சர் எ.வ.வேலு முன்பு நிற்க, வாய்யா கோரிக்கை மன்னா நான் கலசபாக்கம் தொகுதிக்கு மட்டுமா அமைச்சர்? தமிழ்நாட்டிற்கே அமைச்சர் என்று சரவணனை பார்த்து கிண்டலடித்து விட்டு, கோரிக்கைகளை செய்து கொடுக்க, நாளடைவில் கலசபாக்கம் மகிழ்ச்சி பாக்கமாக மாறிவிட்டது.
கட்சிக்காரனா இருந்தாலும் தொகுதியிலுள்ள வாக்காளர்களா இருந்தாலும், நான் எதுக்கும் பணம் வாங்க மாட்டேன், தரவும் மாட்டேன் எப்ப கூப்பிட்டாலும் உங்க பின்னாடி வர்றேன் அதிகாரிகளை பார்க்கலாம், அமைச்சரை பார்க்கலாம், உங்க கோரிக்கைகளை செஞ்சி தர்றேன் இது என் கடமை என்று ஓப்பனாக பேசும் சரவணன், என் பெயரைச் சொல்லி காரியம் முடிச்சி தருகிறேன் என்று யார் பணம் கேட்டாலும் தராதீங்க என்றும் சொல்லிவிட்டார். போன் பண்ணா உடனே எடுப்பார் பதில் சொல்லுவார். தொகுதியில எந்த நிகழ்ச்சி நடந்தாலும் கலந்து கொள்வார். பாரபட்சம் பார்ப்பதில்லை தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.
கலசபாக்கம் தொகுதியில எஸ்.ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களால் செய்யமுடியாதவற்றை சரவணன் அமைச்சர் எ.வ.வேலு துணையோடு சாதித்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் கலசபாக்கம் திமுகவினர் உயர்மட்ட பாலங்கள் ஐந்து எண்ணற்ற சிறுபாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்கின்றனர். ஜவ்வாதுமலையில் சாலை வசதி, மலைவாழ் மக்களின் கனவான சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளை சாதித்திருக்கிறார். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சரவணன், இன்னிக்கி என்ன நிகழ்ச்சி இருக்கு என்று பார்ப்பார் எதுவும் இல்லையென்றால், கலசபாக்கத்திலுள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு கிளம்பிடுவார் மதியம்வரை அலுவலகத்தில் பார்க்கலாம் மாலையில் திருவண்ணாமலை மாந்தோப்பில் உள்ள வீட்டில் பார்க்கலாம்.

கலசபாக்கம் தொகுதியில் சரவணனின் செயல்பாடுகளை சர்வே மூலம் தெரிந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருவரும், சரவணனை கூப்பிட்டு பாராட்டி இருக்கின்றனர். அந்த அளவிற்கு தொகுதியில் நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார் எல்எல்ஏ சீட்டு எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் ஒருவர் நம்மிடம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில இருந்து வந்து கலசபாக்கம் தொகுதியில காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்யறாங்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்டார். அமைதியாக கேட்டுக்கொண்டு அவரிடமிருந்து மெல்ல நகர்ந்தோம்.
முதல்வர் ஸ்டாலின் வருகை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை அமைச்சர் எ.வ.வேலு மூவரின் வருகையின் மூலம் கலசபாக்கம் தொகுதி வாழ் மக்களுக்கு நிறையவே நலத்திட்டங்கள் போய் சேர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
– ஆலவாயர்