பணத்திற்கு பதவி…ஈரோடு பாஜகவில் பூகம்பம்!

ஈரோடு வடக்கு மாவட்ட பாஜகவில் வெடித்த உட்கட்சி பூசல்., காசு வாங்கிக் கொண்டு பதவி வழங்குவதாக மாவட்டத் தலைவரை சுற்றி நின்று வாக்குவாதம் செய்த பாஜகவினரின் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தில் பாஜக-வின் அந்தியூர் தெற்கு ஒன்றிய தலைவரை அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக-வினர்,  மாவட்டத் தலைவரான கலைவாணியை சூழ்ந்து கொண்டு தற்போது அறிவித்திருக்கும் ஒன்றிய தலைவரை முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் காசு வாங்கிக் கொண்டு அவரை நியமித்ததாகவும், கட்சியில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஒரு முக்கியமும் தரவில்லை என குற்றம் சாட்டி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து பாஜக நிர்வாகிகளிடம் கேட்டதில் ,

தற்போது பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக ஒன்றிய தலைவர்களை  தேர்தல் வைத்து தேர்தெடுக்கப்பட வேண்டும்,

ஆனால் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் உட்பட இங்குள்ள பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவராக உள்ளனர், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தற்போது நியமிக்க கூடிய ஒன்றிய தலைவர்களையும் அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே நியமித்து வருகின்றனர்,

தற்போது எந்த ஒரு தேர்தலும் நடத்தப்படாமல் அவர்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்துள்ளனர். இதே போல தான் அந்தியூர் வடக்கு ஒன்றியத்திலும் நியமித்துள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய பதவிகள் அனைத்தும் அவர்களது சமூகத்தைச் சார்ந்தே நியமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி உள்ளனர்.

பாஜகவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தொடர்பாக மாவட்ட தலைவரை பாஜகவினர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் கட்சியினரிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– நாதன்