‘தலைநகரம்’ பாணியில்,
வசூல்ராஜா கொடூர கொலை..
கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு…?
காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி வசூல்ராஜா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல் துறையின் அறிவுரையின் பெயரில் தற்போது எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை வாசலில் வசூல்ராஜா பகல் 1 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார்.அப்போது அது மார்பு பகுதியில் பட்டத்தின் விளைவாக அப்பகுதி முழுவதும் சிதைந்து அதே இடத்தில் நிலை குலைந்து உயிரிழந்தார். வெடி சத்தம் கேட்டதும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வெளியே வந்து பார்க்கும்போது அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததும் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில்
சம்பவம் இடத்திற்கு இரண்டு ஏடிஎஸ்பி தலைமையிலான குழுவினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள், மோப்பநாய் உதவியுடன் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
யார் இந்த வசூல் ராஜா? திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜா மீது இருபதுக்கும் மேற்பட்ட கொலை, முயற்சி, ஆக்கடத்தல், மிரட்டி பணம் வசூலித்தல் இருவருக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. துவக்கத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவர் நண்பரை கொலை செய்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்த நிலையில் 2011க்கு பிறகு வசூல்ராஜா பெரிய ரவுடி ஆனார். வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் மேலும் சில பைனான்சியர்களுக்கு பணத்தை வசூலித்துக் கொடுக்கும் வேலையும் செய்து கொண்டிருக்கிறார். இதனாலேயே அவரை வசூல்ராஜா என அழைத்துள்ளனர்.
ஒருவரை கொலை செய்த ஸ்கெட்ச் போட்டால் அவருக்கு நெருக்கமானவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கொலை செய்ய வேண்டிய நபரை போதையில் மட்டையாக்கி விட்டு அதற்குப் பிறகு கொலை செய்வது வசூல்ராஜாவின் வழக்கமாம். தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் இருந்ததால் திருந்தி வாழ்வதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு தன் மீதான வழக்குகளை முடிப்பதில் கவனமாக இருந்திருக்கிறார். மேலும் அச்சுறுத்தல் காரணமாக வேலூர், ஆந்திரா என தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது சொந்த ஊருக்கு வந்தபோது வசூல்ராஜா கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்புவிசாரணையில் தெரியவந்தது
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரவுடியான வசூல் ராஜா, கடந்த 11ம் தேதி, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 கல்லுாரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 4 பேர் தப்பியோட முயற்சித்தபோது விழுந்ததால், கை எலும்பு முறிந்து மாவு கட்டு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்
காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38; இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகளோடு, காஞ்சிபுரத்தில், ‘ஏ’ பிளஸ் பிரிவு ரவுடியாக வலம் வந்தார்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, கடந்த 11ம் தேதி, பிற்பகல் 1:00 மணியளவில் வந்தார். அப்போது, தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
காஞ்சி தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், வசூல் ராஜாவின் முந்தைய குற்ற சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்தனர்
கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர்களின் காட்சிகள், திருக்காலிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. காட்சிகளில் பதிவாகியிருந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர், விபரங்கள் தெரியவந்தன.
இதையடுத்து, திருமால்பூர் ரயில் நிலையம் அருகே இக்கொலை வழக்கு தொடர்புடைய இளைஞர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்றபோது, அங்கிருந்த பரத், 20; சிவா, 19; திலீப்குமார், 19; சூர்யா, 19; சுரேஷ், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர், அப்போது, தப்பி ஓடிய பரத், சிவா, திலீப்குமார் ஆகிய மூன்று பேரின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இக்கொலையில் தொடர்புடைய மேலும் பலர் பற்றி தகவல் கிடைத்தது. அதன்படி, ஜாகீர்உசேன், 25. சுல்தான், 32; ஆகிய இருவரும் வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்தபோது, ஜாகீர் உசேனை போலீசார் பிடிக்க முயன்றபோது, அங்கு விழுந்து கை எலும்பு முறிந்தது. சுல்தானையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கிடைத்த தகவல்களை வைத்து, மோகனசுந்தரம், 18; மணிமாறன், 19; சரண்குமார், 20, ஆகிய மூன்று பேரையும் போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், காஞ்சிபுரத்தின் ரவுடி பொய்யாக்குளம் தியாகுவும், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அசோக், 23, என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கை உடைந்த நான்கு பேருக்கும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்த பின், நேற்று, நீதிமன்ற காவலில் 10 பேரையும், வேலுார் சிறையில் நேற்று போலீசார் அடைத்தனர்.
கொலைக்கான பின்னணி விபரம் குறித்து போலீஸ் தரப்பில்..,
கைது செய்யப்பட்டவர்களில், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த சுல்தான், 32. இவரது அண்ணன் நிவாஸ்கான் என்பவரை, 2018ல், வசூல்ராஜாவின் கூட்டாளிகள், கொலை செய்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில், வசூல்ராஜாவை கொலை செய்ய சுல்தான் உள்ளிட்ட நபர்கள் திட்டமிட்டுள்ளனர்.அப்போது, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் கல்லுாரி இளைஞர்கள் சுல்தான் உள்ளிட்ட நபர்களோடு சேர்ந்துள்ளனர்.
வசூல்ராஜாவை கொலை செய்ய பல மாதங்களுக்கு முன்பாகவே திட்டம் தீட்டப்பட்டது. கொலை சம்பவத்தில் ஈடுபட கல்லுாரி மாணவர்களும் தயாராகினர். அதன்படி, சிவா, திலீப், சூர்யா, மோகனசுந்தரம், மணிமாறன் என, ஐந்து கல்லுாரி மாணவர்கள் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.வசூல் ராஜாவை கொலை செய்ய, சம்பவ இடத்திற்கு பரத், திலீப், சிவா, சுரேஷ், சூர்யா என, ஐந்து இளைஞர்கள் டூ – வீலர்களில், கையெறி குண்டு வீசி, கத்தியால் வெட்டி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கூடுவாஞ்சேரியில் உள்ள அசோக் என்பவர் கையெறி குண்டு தயாரித்து கொடுத்துள்ளார். அவர், ஐந்து குண்டுகள் தயாரித்து கொடுத்ததில், மூன்று குண்டுகள் வீசி இளைஞர்கள் பயிற்சி எடுத்த பின், மீதமுள்ள 2 குண்டுகள் வைத்து, கொலை செய்துள்ளனர். அசோக்கை நாங்கள் தேடி வருகிறோம்.கைதானவர்களிடம் இருந்து இரண்டு டூ – வீலர்கள், 9 வெட்டு கத்திகள், 4 மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேரும், படிப்பில் நாட்டமில்லாமல், தவறான நட்பு வட்டாரம் அமைந்திருப்பதாகவும், ஏரியாவில், அனைவரும் தங்களை பார்த்து பயப்பட வேண்டும் என, நோக்கத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகு, இந்த வழக்கில் சம்பந்தம் இருக்க முகாந்திரம் இருப்பதால், அவரையும் இவ்வழக்கில் சேர்த்திருக்கிருறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
– பா.மணிகண்டன்
