சுகமான சோகம்: சென்னைக்கு வந்த சோதனை
கடந்த ஒரு வாரத்தில் இரு முறை 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும் அளவு தமிழ்நாட்டில் இந்த பருவத்தில் கன மழை பெய்துள்ளது. மழையே சுகம், வளம், வரம். ஆனால், இயற்கையின் அந்த வரம், மனிதனின் செய்கையால் சாபமாக மாறும் அபாயம் உள்ளது. அதிலும், தமிழ்நாட்டின் சென்னை பட்டினம் இந்த சோகத்துக்கு இலக்காகியுள்ளது. இங்கு 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் சமீபத்தில் பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்துள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் என சென்னையை சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களை திறந்துவிடுமளவு மழை நீர் பெருகியுள்ளது. அடையாறு, கூவம், கொசஸ்தலை எல்லாம் பெருகி ஓடுகிறது. நவம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரை நல்ல மழை இருக்கும்.அனைத்து மாவட்டங்களிலும் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். அரபிக் கடல், வங்கக் கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 19ஆம் தேதி வரை மழையை கொடுக்கும். 20ஆம் தேதி தான் வானிலையில் மாற்றம் ஏற்படும். வெப்பநிலை அதிகரித்து வெயில் தென்படத் தொடங்கும். ஆனால், டிசம்பர் மாதத்திலும் கனமழை முதல் மீண்டும் மிக கனமழை வரை பெய்யக்கூடும். என வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆருடன் கூறத்தொடங்கியதால் மக்கள் கலவரமடைந்தனர். சென்னைக்கு எவரும் வரவேண்டாம் என்ற அறிவிப்பு வேறு அவர்களை கலவரப்படுத்திவிட்டது. அன்றாடங்காய்ச்சிகள் அகதிகளாகிவிட்டனர். இதுவே தொடர்ந்தால், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். போக்குவரத்து தடைப்படும். நோய், பசி யாவும் வர வாய்ப்புள்ளது. ஆற்றங்கரைகளில், குடியிருப்புகளாக்கப்பட்ட குளம், ஏரிக் கரைகளில் இருப்பவர்கள் விழித்தே இருக்க வேண்டும். உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சுகமான மழை, சோகமான பெருந்துயரமாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம், ஆக்கிரமிப்பு, நகரமைப்பு. சென்னையில் ஒரு காலத்தில் நிறைய ஏரி, குளங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டு, திட்டமிடாத குடியிருப்புகளை உருவாக்கியதால், நீர் வரத்து, நீர்ப்போக்கு கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. இதனால் வீடுகளை நீர் முற்றுகையிடத் தொடங்கிவிட்டது. இந்நிலை மாற வெறும் விழிப்புணர்வும் ,தற்காலிகமாக அரசு செய்யும் ஏற்பாடும் போதாது. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம், வரத்து, போக்கு கால்வாய்கள் சீரமைப்பு, நீர்நிலை அல்லாத தரிசு பூமியில் புதுக்குடியேற்றம் என அரசு திட்டமிடாவிட்டால் இது ஆண்டுதோறும் நிகழும் ஆபத்தாகிவிடும்.