தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 200 நாள்களைத் தாண்டி விட்டது. அவர்கள் வந்த நேரம் சோதனைகள்தான் அதிகம் எனலாம். காரணம் தொடர்ந்து கொரோனா , கடும் மழை வெள்ளம்,என்று தொடர் சிக்கலை திமுக அரசு சந்தித்து வந்தது. இப்போது சற்று ஆசுவாசப்படுத்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவும்,ல் பாஜகவும் தொடர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றார்கள். எவ்வளவு நன்மைகளைச் செய்தாலும் இது நல்ல பெயரை அவர்களுக்குத் தரவில்லை. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக அமைச்சர்கள் பல கோடி ஊழல் செய்துள்ளதாகவும், திமுக ஆட்சி அமைந்ததும் முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். இப்போது ராஜேந்திர பாலாஜி மீது பிடி இறுகி உள்ளது. அவர் மீதான ஊழல் புகார்களை விலாவாரியாக எடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து ஏழு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை5 முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. முதலில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அடுத்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி,
தொடர்ந்து முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என நடவடிக்கை பாய்ந்தது. இதனால் எடப்பாடி ,ஓ.பி.எஸ் இருவரும் பதட்டத்தில் உள்ளனர். காரணம் அடுத்துப் பாயப்போவது எடப்பாடி மீது என உளவுத்துறை வட்டாரங்கள் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது. உடனே திமுக அரசை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவு முறையானவருமான தங்கமணியின் வீட்டில் ரெய்டு நடந்தது.இதைக் கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அவர், ஆட்சி மாற்றம் வந்தவுடன் நாங்களும் புதிய ஸ்கிரிப்ட் எழுதி இதே லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றுவோம்.5 ஆண்டு காலம் கழித்து அ.தி.மு.க.வின் ஆட்சி மீண்டும் வரும். நிச்சயம் வரும். ஆளும் தி.மு.க.வின் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம்.
ஆட்சி நிரந்தரமில்லை. அதிகாரிகள், காவல் துறையை எச்சரிக்கிறோம்.என்று மிகக் கடுமையாக ஒருமையில் பேசியுள்ளார்.இதே போல மற்றோர் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர், இதே பாணியில் மிரட்டிய உள்ளார். ஏற்கனவே வேலுமணி மீது நடவடிக்கை பாய்ந்த போதும் அதிமுகவினர் ஆர்ப்பரித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் தவிர்க்க முடியாத 3 மணிகள் என்றும் ஆட்சியைத் தக்க வைத்தவர்கள் என்ற பெருமை படைத்தவர்கள் வேலுமணியும் தங்கமணியும் என்பது முக்கியமானது. எனவே அவர்களை டார்கெட் செய்வதை எடப்படியால் பொறுக்க முடியவில்லை. இப்படி தனக்கும் ஆபத்து வரும் என்பதால் அதிமுகவை காப்பாற்றுவதுபோல போராட்டம் நடத்தி இருக்கிறார்.
பொதுவாக மக்கள் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அதை மறந்துவிட்டு விலைவாசி உயர்வு, பொங்கல் பரிசுத் தொகை வேண்டும் என உப்பு சப்பில்லாத காரணம் காட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் பெருமளவில் அதிமுகவினர் கலந்து கொண்டதுதான். அப்படி ஒரு எதிர்ப்பை காட்ட இப்படி ஒரு ஏற்பாடு எனக் கூறலாம். மக்கள் பிரச்னைகள் தேவையில்லை. தங்களை காப்பாற்றிக்கொள் வேண்டும் என்ற ரீதியில்தான் இப்படி போராட்டம் நிகழ்ந்துள்ளது. கட்சி வலுவாக இருக்கிறது என்பதைக் காட்டவும் தொண்டர்கள் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாய்வதால் சோர்வாக இருந்தனர். அதைத் தவிர்க்கவே இந்த போராட்டம் எனலாம். சரி இவ்வளவு போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், காஸ், விலை உயர்வை ஏன் கண்டுகொள்ளவில்லை எனக் கேள்வி எழுந்துள்ளது. இப்படித் தொடர்ந்து அதிமுக மீது ரெய்டு பாய்ந்து வரும் நிலையில் கொஞ்ச நாள்கள் பரபரப்பு ஏற்படுகிறது. அப்புறம் ஒன்றும் நடப்பதில்லை. இதை திமுகவினரே விரும்பவில்லை. ஏனென்றால் இதே ஜெயலலிதாவாக இருந்தால் என்ன ஆயிருக்கும் .ஏதோ ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளி நன்றாகக் கவனிக்கச் சொல்லி இருப்பார். ஆனால் ஸ்டாலின்அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.சக கூட்டணி கட்சித்தலைவர்கள் கூட கடும் எரிச்சலில் உள்ளனர். ஆனால் எந்த பயமும் இல்லாமல் எடப்பாடி உள்ளிட்டோர் சொடக்கு போட்டுப் பேசுகின்றார்கள். இந்த தைரியம் எப்படி வந்தது? அப்படியானால் தமிழக போலீஸ்வேஸ்ட் என்றுதான் கூற வேண்டும் என திமுக தொண்டர்களே புலம்புவதைப் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்வதென்றால் ஒன்றிய பாஜக அரசின் பின்புலம் பக்காவாக இருப்பதால் எடப்பாடி இப்படி தெனாவட்டாக பேசுகிறாரா என கேள்வி எழுகிறது. இப்படி அமைச்சர்களை கைது செய்யாமல் இருப்பதால் திரைமறைவு பேரம் நடக்கிறதா அல்லது பாஜக அரசின் அச்சுறுத்தல் உள்ளதா என நினைக்கத் தோன்றுகிறது. அப்படி ஒருவேளை அதிரடி மேற்கொண்டால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ பாயுமா என்ற சந்தேகமும் உள்ளது. ஊழல் என்பதை நிரூபித்து சட்டம் தன கடமையை செய்யட்டும் .நாம் பழி வாங்குவதாக நினைக்க கூடாது என்பது முதல்வரின் திட்டம் எனவும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு கேட்ட பெயர் வரட்டுமே எனவும் ஒரு செய்தி உலா வருகிறது அதே சமயம் வர இருக்கும் மாநகராட்சி தேர்தலில் அதிமுகவை முடக்கவும் , திமுக மீது பழி வந்து விடக்கூடாது எனவும் இப்படி முதல்வர் பதுங்குவதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. மக்களை பொறுத்தவரை கைதான் அமைச்சர்களுக்கு உடனே தண்டனை தர வேண்டும். இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள். பிரேக் பார்த்துக்கொள்வோம் என இருக்கவேண்டாம் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பொறுமையாக இருந்தது அதிமுகவை வலுவிழக்க செய்ய வேண்டும் மக்கள் கேள்வி கேட்கட்டும் என திமுக அரசு இருந்தால் அது அதிமுகவினருக்கு மிகவும் பலத்தை தரும் பயம் இருக்காது. எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சவடால் விடுவதற்கு என காரணம் என யோசிக்க வேண்டும்..அத்துடன் ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற வாசகத்தை எதுக்கு எடப்பாடி திரும்ப திரும்ப சொல்கிறார் என்பதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தனை பணத்தையும் மீட்டு அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும். ஆளானபட்ட ஜெயாவையே ஆட்டி அசைத்த திமுக எடப்பாடியை ஏன் விட்டு வைத்துள்ளதுஎன்பதே இப்போதைய கேள்வி. இது பாய்ந்திருந்து தாக்கும் புலி தந்திரமா அல்லது நரி தந்திரமா என தெரியவில்லை. பார்க்கலாம்.
– மூத்த பத்திகையாளர் எஸ்.ரவீந்திரன்