குறுகிய சாலை,இருமடங்கு போக்குவரத்து…கடும் நெரிசலில்,வண்டலுார் — வாலாஜாபாத் சாலை…

வண்டலுார் — வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று சென்று வருகின்றன.

இந்த சாலையில் உள்ள படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், 2022 ஜன., மாதம் துவங்கி, மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது.

பாலப்பணியால் சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டன. இதனால், சாலை குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்தது.

வண்டலுார் — வாலாஜாபாத் சாலையில் பாறை, ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் அதிகளவில் செல்கிறது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றிகொண்டு ஏராளமான கன்டெய்னர் வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன.

‘பீக் ஹவர்’ நேரங்களில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், ஒரே நேரத்தில் அதிகளவில் வருவதால், காலை – மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், படப்பை வழியே லாரி, கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல் ஒரகடத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை படப்பை வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.

காரணித்தாங்கல் சந்திப்பில் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில் வழியாக வண்டலுார் செல்ல அறிவுறுத்தினர்.

இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வண்டலுார் — வாலாஜாபாத் சாலையோரம் வரிசைக்கட்டி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சாலையோரம் நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சேலையூர், தென்மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பொது வாகனங்கள் பெருங்களத்துார், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைந்து, இ.சி.ஆர்., – ஓ.எம்.ஆர்., சாலைகளில் பயணிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதற்கு மாற்றாக, பெருங்களத்துார், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக, தாம்பரம் – வேளச்சேரி சாலையை அடையும் வகையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் புதிய பாலத்தை ஒட்டி துவங்கி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் வழியாக வேளச்சேரி சாலையுடன் இணையும் வகையில், 75 கோடி ரூபாய் செலவில், இப்பணி நடந்து வருகிறது. முதற்கட்ட பணியில், 60 சதவீதம் முடிந்து விட்டது.

இரண்டாம் கட்ட பணிக்காக, சேலையூர் அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 126 கட்டடங்களை இடிக்கும் பணி, கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

கட்டடங்களை இடிக்கும் போது, அங்குள்ள கொய்யா, தென்னை, நெல்லி, வேப்பம், மாமரம் உள்ளிட்ட மரங்களை, பொக்லைன் வாகனங்களை கொண்டு வேரோடு சாய்க்கின்றனர்.

பொதுவாக, இதுபோன்ற பணியின் போது மரங்களை வேரோடு பிடுங்கி, வேறு இடத்தில் நட்டுபராமரிப்பது வழக்கம்.

இதை அடிப்படையாக கொண்டு, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில், மேம்பால பணிக்காக அகற்றப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு பராமரிக்கலாம்.

இதன் வாயிலாக, பசுமை பகுதி அதிகமாகும். தாம்பரம் மாநகராட்சியில், பசுமை பகுதியை அதிரிக்கும் நடவடிக்கையாக, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

அப்படியிருக்கையில், ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் உள்ள மரங்களையும் வேரோடு பிடுங்கி, வேறு இடங்களில் நட்டு பராமரிக்க, மாநகராட்சி முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்

– ப.மணிகண்டன்